Sight_2016_07_04_150655_675_ebookBack_Cover
ஈழத்தில் ஏற்பட்ட யுத்தத்தாற் பல காரணங்களுக்காக அகதிகளாய்ப் பல இலட்சம் மக்கள் இந்தியா, ஐரோப்பா, கனடா, அவுஸ்ரேலியா என்று புலம் பெயர்ந்தார்கள். ஆனால் புலப்பெயர்வு என்பது வரலாற்றுக் காலங்களிலும், அதற்குப் பிந்திய காலணித்துவக் காலங்களிலும், அதைத் தொடர்ந்தும் நடைபெற்றிருக்கின்றன. அவை வரலாறாகிவிட்டவை என்று வைத்துக் கொள்வோம். இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்பு மேற்படிப்புக்காக, தொழிலுக்காக ஈழத்தில் இருந்து உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாக முதல் பலர் புலம்பெயர்ந்து சென்று இருக்கிறார்கள். கப்பலுக்கு, மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று செல்வந்தர்கள் ஆனவர்கள் பற்றிய விபரங்களைச் சிறுவனாக இருக்கும்போது கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி, யுத்தம் தொடங்குவதற்கு முன்னால் வேலைக்காகப் புறப்பட்டு, ஐரோப்பாவில் உண்டான நட்பின் நிமிர்த்தம் அங்கே தங்கிவிட்ட நண்பர்களைச் சுற்றிப் புனையப்பட்ட நாவலே இது.
ஈழத்திலிருந்து யுத்தத்தால் புலம் பெயர்ந்தவர்கள் இது ஒரு தற்காலப் புலப் பெயர்வே என்று எண்ணி இருந்தனர். இந்திய இராணுவம் இலங்கையை ஆக்கிரமித்தபோது நாடு திரும்புவதற்கான நாள் வந்துவிட்டதாய் சந்தோசப்பட்டு அவதிப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள். முடிவில் அந்த நண்பர்கள் இறுதிக் காலத்தை இந்த ஐரோப்பிய, கனேடிய அல்லது அவுஸ்ரேலிய மண்ணில் கழிப்பதற்கு தங்களைத் தாயார் செய்கிறார்கள். எரிப்பதா புதைப்பதா என்கின்ற விவாதமும், ஓய்வூதியம் சேர்ப்பது பற்றிய விவாதமும் தொடர்கிறது. சிலர் தங்கள் கடைசிக் காலத்திற்காய் மாய்ந்து மாய்ந்து காப்புறுதி கட்டுகிறார்கள். அரச காப்பகங்கள் இருந்தாலும் அதைவிடப் பாதுகாப்பு வேண்டும் என்று நினைக்கிறார்கள். இருந்தும் அவர்களின் அசைபோடல்களும், நாட்டைப் பற்றிய அங்கலாயிப்புக்களும் இன்னும் ஓய்ந்தபாடில்லை. அவை ஆத்மாக்களோடு ஒன்றியதாகக் கூடு விட்டு மேலுலகம் செல்லவும் தயாராக உள்ளன.
ஒருவனுடைய வயோதிபக் காலம் இந்தியாவில் அல்லது ஈழத்தில் எப்படிக் கழியும் என்பதற்கு ஏற்கனவே பல நாவல்கள் வந்திருக்கலாம். அதே தமிழர்களின் முதுமைக் காலம் ஐரோப்பாவில் எப்படி இருக்கும் என்பதையும், அதனால் உருவாகும் ஆத்ம விசாரணைகளையும் உள்ளடக்கியதே இந்த நாவல். இங்கு உணவைப் பிச்சை எடுக்க வேண்டியதில்லை என்றாலும் உறவைப் பிச்சை எடுப்பவர்கள் பலர் உள்ளார்கள்.
இதுவும் எனது ஆரம்பக்காலத் தொலைந்து போகாத நாவல்களில் ஒன்று. அவதியாக வந்த கிறுக்கலில் சில ஆதாரப்படுத்தல். பிரசுரிப்பதா இல்லையா என்கின்ற இழுபாட்டில் கிடந்தது. படைப்பு எப்படி இருக்கிறது என்பதை நானே முடிவு செய்யாது வாசகர்கள் கையில் விட்டுவிட்டால் என்ன என்கின்ற எண்ணத்தில் இதைப் பிரசுரிப்பதாக உத்தேசித்திருக்கிறேன்.
என் இலக்கியப் பயணத்திற்கு உலகம் எங்கிருந்தும் ஆதரவு தரும் வாசகர்களாகிய உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன்

இ.தியாகலிங்கம்